
எவர் இலங்கையின் திருகோணமலையை ஆள்கின்றாரோ அவர் இநதுமா சமுத்திரத்தை கட்டி ஆள்கின்றார்-என்ற பிரித்தானியரின் கூற்றினை அமெரிக்கா, இந்தியா, சீனா,சிங்கப்பூர் உள்ளிட்ட சக்திகள் இன்றும் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பது எமது மாவட்டத்தின் கேந்திர முக்க்கியத்துவத்தினை எடுத்துக்காண்பிக்கின்றது. பல் இனங்கள் வாழும் இந்நாட்டினை முழு சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் சுதந்திரத்தின் பின்மாறி மாறி வந்துகொண்டிருக்கும் எல்லா அரசுகளும்கூட ஒரே கருத்தில் தொடராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனை நாம் அவதாணிக்கலாம்.
சிறுபான்பான்மை இனங்கள் செறிநது வாழ்கின்ற வடக்கு, கிழக்கு போன்ற ஓரிரு மாகாணங்கள்,மாவட்டங்களையும் கூட பௌத்த மக்களை குடியேற்றி தமது பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம் பெரும் சப்தமில்லாமலும் சிலபோது நம்மவர்களின் துணையுடனும்(அறியாமலுமிருக்கலாம்) மிக அழகாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இப்பின்னணியில்த திருகோணமலை மாவட்டத்தின் முக்கியத்துவமும் கருத்திற்கொள்ளப்பட்டு நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களமயப்படுத்தல் நகர்த்திச்செல்லப்படுவதை நாம் அவதாணிக்கலாம்.
+ 1955 ம் ஆண்டுகளில் மாவட்ட சனத்தொகையில் 6% இலும் குறைவாக இருந்த சிங்கள சமூகம் இன்று 26% வரை
அதிகரிக்க்கப்பட்டுள்ளது..

+ திருமலை மாவட்ட அபிவிருத்தி விஷேட செயற்திட்டமொன்று 2030 இல் முழுமைபெறவுள்ளது,கல்வி, சுகாதாரம், நகராக்கம், புண்ணிய பூமி/பு ஸ்தள பிரகடனம், கடற்றொழில்,நிர்வாக கேந்திரமுக்கித்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ள இத்திட்டத்திலும் முஸ்லிம் பிரதேசங்கள் உள்வாங்கப்படாது பல விடயங்கள் முடிக்கப்பட்ட நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது,மிகப்பெரும்பாலும் மாவட்டத்தில் சிறுபான்மையாகவுள்ள சிங்கள சமூகத்தை மையப்படுத்திய இடங்களிலேயே இவ்வபிவிருத்தி சென்று கொண்டிருக்கின்றது.
- மாவட்ட செயலகம் (கச்சேரி )-4ஆம் கட்டையில்,பலமான பல நியாயப்பாடுகளைக்கொண்ட கிண்ணியா வைத்தியசாலையை விட்டுவிட்டு கந்தலாய் வைத்தியசாலை மத்திய அரசு உள்வாங்கி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை ,வர்த்தக வலயம் கப்பல்துறையை அண்டி உருவாக்கப்பட்டுள்ளமை..போன்ற பல உதாரணங்களைக்கூறலாம்.

இத்திட்டஙகள் முன்னெடுக்கப்பட்ட,ஆரமபிக்கப்பட்ட அந்தந்தக்காலப்பகுதிகளிளும் எமது மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் சமூகத்தலைமைகள் காணப்பட்டு வந்துள்ளன.ஆயினும் அவர்களது முன்னெடுப்புக்கள் இப்பெரும் சவால்களைமுறியடிப்பதற்கு த்தேவையான பலத்தினை கொண்டிருக்கவில்லை அல்லது இதன் அபாயத்தை சரியாக உணர்ந்து ஒருமித்துப்போராடவில்லை.அவர்களது தனிப்பட்ட,சிறு சிறு கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமலே அத்தனையும் அரங்கேற்றபட்டு வருகின்றன.
இன்று தோப்பூரின் செல்வ நகர் காணி ஆக்கிரமிப்பு,புல்மோட்டை, கரிமலை ஊற்று, கிண்ணியாவின் எல்லைப்புற காணிகள் ஆக்கிரமிப்புக்கள் யாவும் இப்பெரும் திட்டத்தின் சில துளிகளேயாகும்.
நாட்டின் 25 மாவட்டங்களுள் திருகோணமலை(43% ),அம்பாறை(46% ) ஆகிய இரு மாவட்டங்கள் மாத்திரமே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவை. நிலைமை இவ்வறு நீடிக்குமானால் இன்னும் ஓரிரு தசாப்தங்களில் எமது மாவட்டமும் சிங்களப்பெரும்பான்மை மாவட்டமாக மாற்றபட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.
ஒரு சமூகத்தின் இருப்பு ,அதன் உரிமைசார் அடிப்படையான விடயங்கள்
வெளிப்படையாக நன்கு திட்டமிட்டு அழிக்கப்பட்டு க்கொண்டிருக்கும் இத்தருணத்திலாவது தலைமைகள் பேதங்கள் மறந்து ஒன்றுபட்டு சவால்களை முறியடிக்க முன்வரல் வேண்டும் ,இவ்வபாயங்களை மறந்து சில வீதிகளையும், கட்டிடங்களையும் அமைத்து தலைமைகளும் மக்களும் திருப்திப்பட்டு பேசிக்கொள்வதும் அப்பாணியில் செயற்படுவதும் சமூக முதிர்ச்சியின்மையையே எடுத்துக்காட்டும்.
ஆக மாவட்ட அரசியல்,சமூகத் தலைமைகளும் மக்களும் பின்வரும் விடயங்களைக்கருத்திற்கொண்டு செயற்படுவதன்மூலம் எமது சந்ததிகள் எதிர்நோக்கவுள்ள பேரபாயங்களை மாத்திரமன்றி தற்பொழுது நாம் சந்தித்துக்கொண்டிருக்கின்ற நெருக்கடிகள்,சவால்களை ஓரளவுக்கேனும் குறைக்களாம் இன்ஷா அல்லாஹ்.
+ சகல தரப்பும் முதலில் பிரச்சினையின் பாரதூரத்தினை சரியாக அறிந்து விழிப்படைதல் வேண்டும்
+மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அனைத்து தலைமைகளும் அப்பிரச்சினைகளில் அவற்றுக்குறிய பெறுமானத்தோடு கவனம்செலுத்துதல்.

+அரசியல் தலைவர்கள் தமது கட்சித்தலைமைகளோடு உரிமைசார் அடிப்படையான விடயங்களை மிகத்தெளிவாக விளக்கி தேவையாயின் பேரம்பேசி தமது அரசியல் பயணத்தை மேற்கொள்தல்.
சாத்தியப்படாதபோது மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்ட தனித்துவமான மாற்று அரசியல் பயணத்தைக்கூட யோசிக்கலாம்.
+சிவில் சமூகத்தலைமைகள் ஒன்றுபட்டு இவ்வபாயதிலிருந்து எமது மாவட்ட முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரவேண்டும்.மாவட்டம்தலுவிய அரசியல் நோக்கமற்ற பரந்த ஷூராக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு இதனை சாதிக்கமுனையலாம்.
+மக்கள் தமது சுய இலாபங்களுக்கப்பால் நமது சந்ததிகளின் நன்மை கருதி செயற்பட உறுதிபூணல் வேண்டும்.தமது வாக்குரிமையை அதனடிப்படையில் பயன்படுத்துதல் வேண்டும்.

+மாவட்டத்தில் சகோதர சமூகங்களும் கனிசமான அளவில்(தமிழ் மக்கள்- 31% , சிங்கள மக்கள்-26%) வாழ்கின்றனர் என்பதை நாம்புறிந்து சகவாழ்வுடன் நீதி தர்மங்களை மதித்து அவர்களுடனான உறவைப்பலப்படுத்தி எமது முன்மாதிரிகளால் அவர்களது மனங்களை வெல்தல் வேண்டும்.
இவ்விடயங்கள்பற்றி சிந்தித்து மாவட்ட முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான நன்மையின் வாயில்களை அல்லாஹ் அருள்கள் பூத்துக்களுங்கும் இந்த ரமாழானில் திறந்தருள்வானாக.
குறிப்பு: சமூக அரசியல் சார் இத்தகைய விடயங்கள் குறித்து நான் எழுதியமை குறைவு நாட்டினதும் மாவட்டத்தினதும் தற்போதைய நிலையில் இவ்விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளமனம் நாடி இதனை எழுதியுள்ளேன் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை வரவேற்கின்றேன்.
No comments:
Post a Comment