
இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் #முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை அது தனியாக பார்க்கப்படவேண்டிய விடயம்.
இங்கு நான் குறிப்பிடும் தகவல் என் அறிவுக்கு எட்டிய வரையில் தொகுக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமான ஈழத்தில் புராதனமான வரலாற்று சான்றுகள் நிறைந்த இடங்களில் கொட்டியார பிரதேசமும் முக்கியம் பெறுகிறது.
மற்றும் கிடைக்கபெற்ற கல் வெட்டுக்கள், சாசனங்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டிட இடிபாடுகள், தொல்மரபுக்கதைகளும் பாடல்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட சான்றுகள்
பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தய பழம் தொல் குடி இடப்பெயர்வுகள் இப்பிரதேசத்தில் உள்ள துறைமுகங்களான இளக்கந்தை, இலந்தத்துறை, வெருகல் ஆகியவை பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. வெருகல் பிரதேசத்தில் கண்டெடுக்கபட்ட முதுமக்கள் தாழி கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மனித நாகரிகத்தை சுட்டி நிற்கிறது. அத்தோடு கறுப்பு சிவப்பு மட்பாண்ட அழிபாடுகள் தொல்பழங்கால மரபை சுட்டி நிற்கின்றன.
கிறிஸ்துவுக்கு முன் உள்ள சன்றுகளில் மிக முக்கியமான இரண்டு கல்வெட்டுக்கள் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.
#சேனையூர்_கட்டைபறிச்சான் பகுதியில் பள்ளிக்குடியிருப்பு செல்லும் வழியில் அமைந்திருக்கும் #கச்சக்கொடி_மலையில் காணப்படும் ஒரு கல்வெட்டு தமிழ் பிராமி சாசனமாக உள்ளது
(ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய)
என்பது இதன் வாசகம் இந்த எழுத்துக்களில் ம தமிழ் பிராமிக்குரியதாக உள்ளது இதனை படியெடுத்து வாசித்த #தொல்லியல் துறை பேராசியர் க. இந்திரபாலா இக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தினார்.

இதே சாயலிலையே #வெருகல்_சித்திரவேலாயுத கோயிலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு குன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதே வாசகங்களே அதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் இப்பிரதேசத்தின் முன்னோர்களின் வாழ்வையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகிறது.
#இலக்கந்தை வேப்பங்குளம் பகுதியில் கூட்டமாக காணப்படும் நடுகற்கள் ஈச்சலம்பற்றைப் பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள், சீனம்வெளியில் கண்டெடுக்கப்ட்ட சில கல்வெட்டுக்கள் இப்பிரதேசத்தில் தமிழர்களின் தொல் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
#எல்லாளன் பற்றி வழக்கிலுள்ள கதை மரபு தொன்ம் சார் நம்பிக்கைகள் ஈச்சலம்பற்றை #செம்பொன்னாச்சி அம்மன் சிலையை எல்லாளன் கொண்டுவந்தான் என்ற கூற்றுக்கள் என்பனவும் எல்லாளன் இலங்கைத்துறையில் இறங்கி ஈச்சலம்பற்று வழியாக பள்ளிகுடியிருப்பு வந்து சேனையூரை கடந்து மல்லிகைத்தீவு மணலாறு வழியாக பொலனறுவையை அடைந்து அனுராதபுரம் சென்றதாக அந்தக்கதை நீழ்கிறது.
இப்பிரதேசத்தின் இளக்கந்தை, நல்லூர், வாழைத்தோட்டம், வெருகல், சாலையூர் முதலான பிரதேசங்களில் காணப்படுகின்ற பூர்வ குடிமக்களின் தொடர்ச்சியான இருப்பென்பது இப்பிரதேச வரலாற்றில் அதன் பழமையை மேலும் சான்று பகிர்கிறது.
#கிறிஸ்துவுக்கு பிற்பட்ட கால சான்றுகள்
பரந்த காடுகளையும், வயகளையும், மேச்சல் நிலங்களையும் கொண்டிருக்கும் இந்த பிரதேசம் தொடர்ச்சியான நகர்வுகளின் மூலம் இடம் மாறி வாழ்ந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. குடி நகர்வுகள் மாறி மாறி இடம்பெற்றிருக்கின்றன.
இன்னமும் பாழடைந்த நிலையிலையே காணப்படுகின்ற நூற்றூக்கணக்கான குளங்களும் அதை அடியொற்றிக்காணப்படுகின்ற மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றாதாரங்களாய் உள்ளன.

#இளக்கந்தக்குளப் பகுதியில் காணப்படுகின்ற அகலமான செங்கற்களால் கட்டப்ப்ட்ட கட்டிடதொகுதியின் அழிபாடுகள் சமிளங்குடாப் பகுதியில் தென்படும் சான்றுகள், சோலைப் பள்ளத்தில் கிடைக்கக் கூடிய மட்பாண்டங்கள், பெண்டுகள் சேனையில் காணப்படுகின்ற அழிபாடுகள், உலவியா குளமும் அதன் சுற்றாடல்களும், ஆதணோடினைந்த உலாவியன் எனப்படும் மன்னன் பற்றிய செய்திகள், அரியமான் கேணியிலே காணப்படுகின்ற பழைய மக்கள் குடியிருப்புக்கான தடயங்கள் என இப் பிரதேசத்தின் வரலாற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.
இங்குள்ள மக்களிடம் வழங்கி வருகின்ற அசோதேயன் என்கிற மன்னன் பற்றிய கதைகளும் இந்த வரலாற்று ஓட்டத்தில் இணைக்கப்பட வேண்டியதே.
சிற்பங்கள் சொல்கின்ற வரலாற்று செய்திகள்
ஒரு பிரதேசத்தின் வரலாற்றில் பழங்கால சிற்பங்களும் ஓவியங்களும் மிக நம்பிக்கைக்குரிய சான்றுகளாக உள்ளன. உலக மனித வரலாறு குகைகளில் புராதன மனிதன் தீட்டிய ஓவியங்களே மனித வரலாற்றை பின்னகர்த்தி சென்றன. அதுபோலவே இப்பிரதேசத்தில் காணப்படும் சிற்பங்கள் நமக்குச்சில வரலாற்றுச்செய்திகளை சொல்கின்றன.
#தமிழ் நாட்டினுடைய வரலாற்றில் பல்லவர்கால சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டன. #சம்பூரில்_பத்திரகாளி கோயிலில் காணப்படுகின்ற பழைய பத்திரகாளி சிற்பம் புடைப்பு சிற்பமாகவே உள்ளது. மிகவும் நேர்த்தியான வேலைபாடுகளை இச்சிற்பம் கொண்டுள்ளது. இது பல்லவர்காலத்தின் பிற்கூற்றை நினைவு படுத்துகிறது. கி.பி #ஏழாம் நூற்றாண்டின் கடைசிக்கால பகுதியைச்சேர்ந்த சிற்பமாக இது இருக்கலாம் போல தெரிகிறது. இந்தச்சிற்பத்தைப்போலவே கட்டைபறிச்சான் அம்மன் நகரில் காணப்படுகின்ற அம்மச்சியம்மன் சிலையும் ஒத்த தன்மையுடையதாக உள்ளது.
பல்லவர்காலத்தில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் திருக்கோணேஸ்வரத்தை பாடுகின்ற போது
கரைகளு சந்தும் காரகிற்பிளவும்
அளப்பெரும் கனமனி வரன்றி
குரைகலோதம் நித்த்கிலம் கொலிக்கும்

எனும் வரிகளில் வருகின்ற கரைகளு சந்து, காரகிற் பிளவு ஆகியன கொட்டியாரத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட விழைபொருட்களாக உள்ளன.
அடுத்த வரிகளில் வருகிற #நித்திலம் என்னும் சொல் #முத்தைக்குறித்து நிற்கிறது. மூதூர் கடற்கரையோரப்பகுதிகள் முற்காலத்தில் முத்துக்குளிக்கும் இடங்களாக இருந்தன.
அதன் காரணத்தினாலையே முத்தூர் எனப்பெயர் பெற்று பின் மூதூராயிற்று. இது கொட்டியாரத்தினுடைய வரலாற்றின் தொடர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தி நிற்கிறது.
#சோழர்கால சான்றுகள்
சோழராட்சிக்காலத்தில் இப்பிரதேசம் சோழமன்னர்களின் முக்கிய ஆட்சிப்பிரதேசமக இருந்துள்ளது. சோழர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களை #பிரமோதயங்கள் என்று அழைத்தனர். கொட்டியாரமும் தனியான பிரமோதயமாகவே கருதப்பட்டுள்ளது பிரமோதயங்கள் வள நாடுகள் என குறிப்பிடப்பட்டு அந்த வள நாடுகளுக்கு பொறுப்பானவர்கள் #கானகன் என அழைக்கப்பட்டனர்.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சுற்று மதிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கொட்டியார கானகன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது {in the royal temple rajaraja and instrument of imperial cola power } என்ற கீதா வாசுதேவன் எழுதிய #நூலில் 87 ம் பக்கத்தில் கொட்டியாரம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கொட்டியாரத்தில் இருந்து தஞ்சைப்பிரகதீஸ்வர் கோயிலுக்கு நெல்லும் தங்கமும் எண்ணையும் வரியாக செலுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சோழர்கால சான்றுகளில் அவர்களது கல்வெட்டுக்களும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன மூதூரில் இருந்து செல்கிற போதும் 64ம் கட்டைக்கு பக்கத்தில் உள்ள #3ம் கட்டை மலை என்று சொல்லப்படுகின்ற #ராஜவந்தான் மலையில் கிழக்கு அடிவாரத்தில் ஒரு கல்வெட்டு காண[ப்படுகிறது. அக்கல் வெட்டானது மேற்குறிப்பிட்ட மலையில் ஒரு கோயில் இருப்பதாகவும் அந்த கோயிலுக்கு மலையில் இருந்து பார்க்கிற போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற வயல் நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது #இக்கல் வெட்டை வாசித்த க,. இந்திரபாலா இதை உறுதிப்படுத்தியுள்ளார் ராஜேந்திர சோழனது காலத்தின் எழுத்து நடை இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ராஜேந்திர சோழன் பெயராலயே இந்தக்கல் வெட்டு உள்ளது.
#கங்குவேலி சிவன் கோவிலில் காணப்படுகிற ஒரு கல் வெட்டு சோழர்காலத்தையே குறிப்பிட்டு நிற்கிறது மேலும் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்படுகிற போது நிறையவே நாம் தகவல்களைப்பெறலாம்.
இதனை விட சம்பூர் பிரதேசத்தில் காணப்பட்ட #தொட்டில் கல் அதனை ஒத்த அழிபாடுகள், சேனையூர் வீரபத்திரன் கோயிலில் காணப்படுகின்ற பொலன்னறுவை சிவன் கோவில் பாணியிலான அடித்தளமாக அமைந்த கட்டிட இடிபாடுகள், தில்லங்கேணியில் வைத்து வழிபட்ட தற்போது கட்டைபறிச்சான் #கும்பத்துமாலின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இப்பிராந்தியத்தில் சோழச் செல்வாக்கினை மேலும் உறுதிபடுத்துகிறது மல்லிகைத்தீவிலுள்ள பழைய சிவன் கோவிலுக்கான அடிப்படைகள் சோழச்செல்வாக்குக்கு உட்பட்டதே
திருமங்கலாயும் சோழர்களும்
#அகஸ்தியஸ்தாபனம் என்று அழைக்கப்படும் திருமங்கலாய் பிரதேசம் சோழமன்னர்களின் ராசதானியாய் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைந்ததாய் உள்ளது.அன்ன்குள்ள கட்டிட அழிபாடுகள் அதனை நிருபிக்கின்றன.
இங்குள்ள சிற்பங்கள் சிவலிங்கம் என்பன சோழர் காலத்தவையே என்பது தொல்லியலாளர்கள் நிருபித்துள்ளனர்.பொலநறுவையில் உள்ள சோழர்களின் சிவன்கோயிலை ஒத்த தன்மை இங்கு காணப்படுகிறது.இப்பிரதேசத்தை மையமாகக்கொண்டு எழுந்த திருக்கரசைப்புராணம்.புராண ரீதியாக சிவபெருமானின் திருமணத்தோடு தொடர்புபட்டு அகத்தியர் ஈழ நாட்டுக்குரியவர் என்பதையும்வலியுறுத்துகிறது.அத்தோடு வளமான ஒரு இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இன்றுவரை தொடர்கின்ற #திருக்கரசைப்புராண படிப்பு ஒரு இலக்கியமரபிலான கல்விமுறமையின் தொடர்ச்சியுமாகும்.ஒரு நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியமைக்கான சாட்சியே திருக்கரசை புராணமும் அகஸ்திய ஸ்தாபனமுமாகும்.சோழப்பேரரசு செல்வாக்கு செலுத்திய 10ம்,11ம்,12ம், நூற்றாண்டுகளில் இப்பிரதேசம் மிகுந்த செல்வாக்கு செலுத்திய இடமாக இருந்துள்ளது.திருமங்கலாயும் அகஸ்தியஸ்தாபனமும் கொட்டியாரத்தின் வரலாற்று மூலங்களின் முக்கிய தடங்கள்.
#சோழப்பேரரசுக்கும் இப்பிரதேசத்துக்குமான தொடர்புகள் கடல் வழியாக இலந்தத்துறையூடாக நேரடியாகவே இருந்துள்ளன பொலநறுவைக்கான தொடர்புகளையும் இங்கிருந்தே மேற்கொண்டிருக்கலாம் போல தெரிகிறது.ஏனெனில் மகாவலி கங்கையின் அடுத்த கரை பொலநருவையின் எல்லைக்குட்பட்டது.
இன்றய சோமாவதிக்கூடாக இத்தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
#கோணேசர் கல்வெட்டு தரும் தகவல்கள்.
கொட்டியாரப்பிரதேசத்தின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்தி விளங்கிக் கொள்ள கோணேசர் கல்வெட்டு பெரிதும் உதவுகிறது.
குளகோட்டு மன்னன் திருகோணமலை பகுதி முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில், இப்பிராந்தியத்தை நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தான் நன்கு பிரிவுகளுக்கும் நான்கு வன்னிபங்களை நியமித்திருந்தான்.
1.திருக்கோணமலை வன்னிபம்
2.கட்டுக்குளப்பற்று வன்னிபம்
3.தம்பலகாமப்பற்று வன்னிபம்
4.கொட்டியாரப்பற்று வன்னிபம்
♥வன்னிபம்என்பது சிற்றரசுகளையே குறிக்கிறது.இலங்கை வரலாற்றில் பல வன்னிபங்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
♦
சோழர்காலத்திலிருந்து இந்த வன்னிப முறைகளுக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
♦பன்னிரண்டாம் நூற்றண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் காலம் வரை கொட்டியாரத்தில் வன்னிபங்கள் அதிகாரத்திலிருந்துள்ளனர்.
கோணேசர் கல்வெட்டு தருகின்ற மற்றொரு செய்தி திருவாசகப்புலவன் பற்றியது”காஞ்சிபுரத்துக் கோயிலொன்றை சேர்ந்த ஒதுவார் குடிகளில் ஒன்றினை வரவழைத்தமை.அக்குடியிலுள்ள ஒருவனை திருக்கோணேஸ்வரத்திலே திருப்பதிகம் பாட நியமித்தமை,அவனுக்கு திருவாசகப்புலவனென்று பெயர் சாத்தியமை.பரவணி ஆட்சியாக பள்ளவெளியில் இண்டவண நிலமும் சம்பூரும் மானியமாக வழங்கி செப்பேடு கொடுத்தமை”புலவன் வ்ரவு எனும் தலைப்பில் காணப்படுகின்றன.
கோணேசர் கல்வெட்டின் விரிவாக எழுந்த திருக்கோணாசல புராணமும் கொட்டியாரம் பற்றிய வரலாற்று செய்திகளை தருகிறது.
♥கோணேசர் கல்வெட்டில் உள்ள பின்வரும் பாடல்கள் கொட்டியாரம் பற்றிய முக்கியமான செய்திகளைத்தருகின்றன.
பாடல்16
தானதிக திருமலைக்கு நாற்காத வழி திருத்தித் தானும் கோண
மான பரற்கென அளித்தேன் கொட்டியாரப் பகுதியோர் மகிழ்த்தே
செய்தல்
ஆன துவர்க்காயினுடன் வெள்ளிலையும் அருங்கதலிக் கனியும்
சாந்தும்
ஊனமறு பால் தயிர் நெய் அரிசி ஒரு நூறு அவணம் உகந்தே ஈதல்
கொட்டியாரப்பற்றில் நான்கு காத வழி தூரத்திற்கு உற்பத்தி விளை நிலங்களை உண்டாக்கி கோணேசப்பெருமானுக்கென கொடுத்தேன் அந்தக்கொட்டியாரப்பற்றில் வாழ்பவர்கள் மகிழ்ந்து செய்ய வேண்டியது யாதெனில் கோணெசர் கோயிலுக்கு பாக்கும், வெற்றிலையும்,வாழைப்பழமும் ,சந்தணமும்,குற்றமற்ற பால்,தயிர் நெய்யும் நூறு அவண அரிசியும் கொடுத்துவரவேண்டும்.
♦17ம்பாடல் ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்
சேமமுற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணையுற திருந்த ஆட்டி
ஓதரிய கெளளிமுனை மீகாமனிடத்தில் வரவு வந்தே கோண
தீதமுற குருகுல நற் கணக்கில் உள்ளபடி நிறைவாய் ஊற்றல்
இலுப்பை புன்னைப்பருப்புக்களை இறையாத்தீவில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் அவைகளை அவர்கள் செக்கிட்டு ஆட்டி ,எண்ணெய் வகைகளை தனித்தனியே ,எடுத்துச்சென்று சொல்லுதற்கரிய கெளளிமுனையிலுள்ள மிகாமனிடத்தில் கொடுக்க வேண்டும்.அதை அவர்கள் ஏற்றிவந்து கோணெசர் கருவூலத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இப்பாடல்கள் மூலம் கொட்டியாரத்தின் வளமும் அதன் வரலாற்றுத் தொடர்புகளும் மேலும் உறுதிப்படுகின்றன.
கொட்டியாரப்பற்றில் 16ம் 17ம் நூற்றண்டுகளில் அதிகாரத்திலிருந்த வன்னிபங்கள் பற்றிய சான்றுகளை பெறமுடிகிறது.வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலில் உள்ள சாசன்மொன்று கயிலாயவன்னியன் பற்றிய செய்தியை தருகிறது. இச் சாசன் வரிவடிவம் பதினாறாம் நூறாண்டுக்குரியதாய் உள்ளது.சாசனம் பின்வருமாறு அமையும்
“சிறி சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயிலாய வன்னியனார் உபயம்
(ம)திமராசா மகன் “என செல்கிறது இக் கல்வெட்டு.கயிலாய வன்னியன் இப்பிரதேச வன்னிபமாக விளங்கியிருக்கின்றமை சான்றாக அமைகிறது.
“பதினேழாம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களால் எழுதப்பட்ட நூல்களோடு வெளியிடப்பட்ட தேசப்படங்களில் கொட்டியாரம்பற்று ஒரு இராச்சியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள இராச்சியங்களின் சிற்றரசுகளின் பட்டியலில் கொட்டியாரமும் ஒரு இராச்சியமாகவே கருதப்பட்டுள்ளது.
கண்டி அரசோடு கொட்டியாரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கு கண்டிய அரசு வரலாற்றுச் செய்திகள் ஆதாரமாக அமைகின்றன.
ஜயவீரபண்டாரனுக்கும்,விமலதர்மனுக்கும் அரசுரிமைப்போட்டி ஏற்பட்ட போது ஜயவீரனுக்கு ஆதரவாக கொட்டியார வன்னிபம் 7980 போர் வீரர்களையும் 600 கூலியாட்களையும்,1000 பொதிமாடுகளையும்,30 போர் யானைகளையும் 25 அலியன் யானைகளையும் அனுப்பி வைத்தான் என்று சொல்லப்படுகிறது.
கி.பி.1611ம் ஆண்டு போர்த்துக்கேயருக்கெதிராக சிற்றரசுகளின் கூட்டமொன்றை கூட்டிய போது அக்கூட்டத்தில் கொட்டியாரப்பற்றின் வன்னிபமான இடலி கலந்துகொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.
கி.பி.1613ம் கண்டிராஜனின் இளவரசனை அழைத்து வரும் பொறுப்பு கொட்டியாரம் வன்னிபத்திடம் வழங்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
இரண்டாம் இராஜசிங்கன் கண்டி மன்னனாக ஆட்சி செய்த காலத்தில் இளஞ்சிங்கன் என்பவன் கொட்டியாரம் வன்னிபமாக விளங்கியுள்ளமையை அறிய முடிகிறது.
♥திருகோணமலை பற்றிய ஒல்லாந்தத் தளபதியின் குறிப்பில் கொட்டியாரப் பற்றில் நிலவிய அரசு பற்றிய செய்திகள் உள்ளன.
கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட றொபட் நொக்சின் குறிப்புக்களும் கொட்டியாரப்பற்றில் நிலவிய அரசுபற்றிய குறிப்புக்களைக்கொண்டுள்ளது.
“வெருகல் சித்திரவேலாயுதர் காதல்” நூல் தரும் வரலாற்றுப் பதிவுகள்:-
தம்பலகாமம் வீரக்கோன் முத்லியார் எழுதிய இந்த நூல் வெருகல் கோயில் அரங்கெற்றம் செய்யப்பட்டமையை பின்வருமாறு கூறுகிறது.
“துன்னுமிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமை பொற்பாதம் வணங்கயினி சொல்லாதை
வன்னிமை தேசத்தார் மகாநாடு தான் கூட்டி
மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையில்
கோதில் புகழ் சேர் வீரக்கோன் முதலிதானியற்றுங்
காதவரங்கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை”
இதில் வருகின்ற தேசத்தார் மகாநாடு என்ற சொற்றொடர் மிக முக்கியமான வரலாற்றுச்செய்தியாக உள்ளது.
♥கொட்டியாரம் ஒரு தேசமாகக் கருதப்ப்ட்டமைக்கான சான்று இங்குள்ளது.தேசத்தின் என்னும் போது,கொட்டியாரம் ஏழு ஊர்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு அடப்பன் மார்கள் நியமிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டமைகான சான்றுகளை நாம் கங்குவேலி கல்வெட்டில் காணமுடியும்.
சேனையூரில் அடப்பன் முறை அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்தமையை இதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.வெருகல் சித்திர வேலாயுத கோயிலின் வருடாந்தர திருவிழாவில் 15ம் திருவிழா சேனையூர், கட்டைப்பறிச்சானுக்குரியது.
♥இத்திருவிழாவை 1980ம் ஆண்டு பொது நிர்வாகத்தவர் பொறுப்பெடுக்கும் வரை சேனையூரின் கடைசி #அடப்பனாக இருந்தவருடைய மகன் வீரக்குட்டி அவர்களே பொறுப்பாக இருந்தார் என்பது என்பது அடப்பன் முறையின் முக்கிய குறிப்பாகும்.
பிரித்தானியருடைய பரிபாலனத்தின் கீழிருந்த பொழுது உள்ளூர் முறைமைகளை அவர்கள் பின்பற்றியிருந்தனர் அடப்பன் உடையார் என தம் ஆட்சிக்கு துணையாக அவர்களை வைத்திருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
1970 களில் புதிய நிர்வாக முறை அறிமுகப்படுத்தும் வரை,கொட்டியாரப்பற்று காரியாதிகாரி எனும் அரச நிர்வாக முறைமையே இருந்தது.
அரசியல் ரீதியாக பாராளுமன்ற தேர்தல்கள் நடைமுறையில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த பொழுது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தமிழரசுக் கட்சியில் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி தெரிவாகினர்.
1970மாண்டிலேயே முதன் முதலாக கொட்டியாரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது.
♥♥♥கிளிவெட்டியின் தவப்புதல்வனும்,கொட்டியாரத்தின் அரசியல் தலைவனாகவும் வெளிப்பட்ட திருவாளர் அ. தங்கத்துரை பரளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்.இவர் காலத்தில் மூதூரில் பல அபிவிருத்தி வேலைகள் நடப்பெற்றன.இன்று வரை மக்கள் மனதில் அவர் பெயர் நிலைத்திருக்கிறது.பயங்கரவாதம் அவரைப் பலி கொண்டாலும் பசுமையான அவர் நினைவு கொட்டியார மக்களின் மனதில் மாறாதது. தங்கத்துரை அண்ணன் என்ற அவர் நாமம் அழிக்க முடியாத ஒன்று.
♥?அரசியல் ரீதியாக தமிழர் கூட்டணியின் உபதலைவராக மூதூரின் திருவாளர் அருளப்பு ஐயா அவர்கள் இருந்தமையும் பின்நாட்களில் அவருடைய மகன் அந்தோனி டொக்டர் தமிழர் கூட்டணியின் செயற்குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டமையும் கொட்டியாரப்பற்றின் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
1977ல் ஏற்பட்ட புதிய தேர்தல் தொகுதி முறைமை கொட்டியாரத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்தது.
பின்நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலம் 1988ல் கொட்டியாரம் தனக்கான பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்திருந்தது,ஆனால் அப்போதய அரசியல் சூழலால் ♥♦?வேறு ஒருவருக்கு அப்பதவி போனது.
♪1994ல் நடைபெற்ற தேர்தலில் திருவளர் அ. தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1987ல் அமைக்கப்பட்ட மாகாணசபையில் கொட்டியாரப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக ♥மூதுரைச்சேர்ந்த போல் ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.அண்மையில் உருவாக்கப்பட்ட கிழக்குமாகாண சபையில் ஈச்சிலம்பற்றை சேர்ந்த சைவப்புலவர் அ.பரசுராமன் மாகாணசபை உறுப்பினராகவுள்ளர்.
♪1981ல் மாவட்ட அபிவிருத்திசபை அமைக்கப்பட்ட போது திருவாளர் தங்கத்துரை அவர்கள் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இப்பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தார்.
2001ம் ஆண்டில் கொட்டியாரத்தைச் சேர்ந்த சேனையூர் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் க.துரைரெட்டினசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்தது.பின்பு 2004ம் ஆண்டு தேர்தலிலும் அவர் கொட்டியாரத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டமை இப்பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
அரசியல் ரீதியாக பார்க்கிற போது முன்னய கிராமசபை முறமை பல பிரதேச தலைமைகளை உருவாக்கியது.தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பல கிராமசபைகள் சிறப்பாக செயல்பட்டன. பழைய கிராமசபை தலைவர்களை நினைவு கூருவது பொருத்தம் என நினைக்கிறேன். கிளிவெட்டி திரு.வினாயகமூர்த்தி, மல்லிகைத்தீவு திரு.சுப்ரமணியம், சம்பூர்,திரு.சரவணை,திரு.சிவராசா,திரு.தாமோதரம், கட்டைபறிச்சான், திரு.கணபதிப்பிள்ளை(சேனையூர்)திரு.சிவபாக்கியம்(சேனையூர்),திரு.சு.குணநாயகம்(கட்டைபறிச்சான்),திரு.செ.இராசரெத்தினம்(மருதநகர்),திரு.சுந்தரமூர்த்தி.(கட்டைபறிச்சான்)ஈச்சலம்பற்று திரு.இ.ஞானகணேஸ்
எண்பதுகளில் புதிய உள்ளூராட்சி நடை முறை கொண்டுவரப்பபட்ட போது மூதூர் பிரதேச சபையின் முதல் தலைவராக கட்டைபறிச்சான் கிராமோதயசபைத் தலைவர் திரு.கோ.இரத்தினசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த இடத்தில் இந்த பிரதேசத்தின் கல்வி வரலாறு பற்றி பேசுவது பொருத்தம் என நினைக்கிறேன்.மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயமே இப்பிரதேசத்தின் தாய் பாடசாலை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்பிரதேச மூத்த கல்வியாளர்கள் இங்கிருந்தே உருவானார்கள்.திருவாளர் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்கள் பல கல்வியாளர்கள் உருவாக வழி சமைத்தவர்களில் முதன்மையானவர்.
No comments:
Post a Comment